பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும் என்று ஷசாங்க் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2025 போட்டியின்போது ஏற்பட்ட மோதல் குறித்து விளக்கமளித்துள்ளார்.
Shashank Singh Says Shreyas Iyer Should Have Slapped Me: ஐபிஎல் 2025 இன் இரண்டாவது தகுதிச் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் மெதுவாக ஓடியதால் ரன் அவுட் ஆனார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அவரை கடுமையாக சாடினார். 204 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் எட்டிப் பிடித்தது. ஸ்ரேயாஸ் 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது சஷாங்க் தனது விளக்கத்தின் மூலம் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயருடன் மோதல் குறித்து ஷசாங்க் சிங் விளக்கம்
அதாவது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் தனக்கு ஏற்பட்ட மோதல் குறித்து ஷசாங்க் சிங் விளக்கமளித்துள்ளார். "என் மீது ஸ்ரேயாஸ் கோபப்பட்டதற்கு நானே காரணம். அவர் என்னை அறைந்திருக்க வேண்டும். இறுதிப் போட்டி வரை என் அப்பா என்னுடன் பேசவில்லை. நான் மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டேன். கடற்கரையில் நடைப்பயிற்சி செல்வது போல அலட்சியமாக இருந்தேன்'' என்றார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
தொடர்ந்து பேசிய ஷசாங்க் சிங், ''போட்டியின் முக்கியத்துவத்தை உணராமல் இருந்தேன். ஸ்ரேயாஸ் என்னிடம், 'உன்னிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை' என்று கூறினார். ஆனால் பின்னர் என்னை இரவு உணவிற்கு அழைத்துச் சென்றார்." என்று சஷாங்க் கூறியுள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையேயான மோதல் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டி குறித்து ஷசாங்க் சிங் பேச்சு
ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான தோல்வி குறித்து சஷாங்க் கூறுகையில், "கடைசி இரண்டு ஓவர்களுக்கான திட்டத்தை நான் வகுத்திருந்தேன். புவனேஷ்வர் குமார் யார்க்கர் பந்துகளை வீசுவதில் வல்லவர் என்பதால் அவரது ஓவரில் 16-17 ரன்கள் எடுக்க திட்டமிட்டேன். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க வேண்டும் என்று கணக்கு போட்டேன். ஆனால் புவனேஷ்வரின் ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது" என்று கூறியுள்ளார்.