காந்தாரா படக்குழுவில் இருந்த நகைச்சுவை நடிகர் ராகேஷ் மற்றும் எம்.எஃப். கபில் ஆகியோர் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், தற்போது அப்படக்குழுவை சேர்ந்த மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.
Kantara 2 crew member dies : கன்னட சினிமாவில் பான் இந்தியா அளவில் வெற்றி பெற்று பெரும் சாதனை படைத்த திரைப்படம் காந்தாரா. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா 2' தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காந்தாரா 2 படக்குழுவில் இருந்து மற்றொரு மரணச் செய்தி வந்துள்ளது. காந்தாரா 2வில் பணியாற்றி வந்த கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிமிக்ரி மற்றும் திரைப்படக் கலைஞர் விஜு வி.கே. மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீர்த்தஹள்ளி தாலுகாவில் உள்ள ஆகும்பேயில் உள்ள ஒரு ஹோம் ஸ்டேயில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காந்தாரா 2 படப்பிடிப்பிற்காக ஆகும்பே அருகே உள்ள ஒரு ஹோம் ஸ்டேயில் தங்கியிருந்த விஜு, நேற்று இரவு திடீரென நெஞ்சுவலியை உணர்ந்தார். உடனடியாக அவரை தீர்த்தஹள்ளி நகரில் உள்ள ஜே.சி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வழியிலேயே விஜு இறந்துவிட்டார். அவரது உடல் தீர்த்தஹள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து அவரது குடும்பத்தினர் வந்த பிறகு பிரேத பரிசோதனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காந்தாரா 2 பட நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்:
சமீபத்தில், காந்தாரா படத்தில் நடித்த மற்றொரு நகைச்சுவை நடிகர் ராகேஷும் மாரடைப்பால் மரணமடைந்தார். படப்பிடிப்பிலிருந்து விடுமுறை எடுத்து நண்பரின் திருமணத்திற்குச் சென்ற அவர், நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். ராகேஷ், தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் மாநிலம் முழுவதும் மிகவும் பிரபலமானவர். ராகேஷின் மரணச் செய்தி படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல் கடந்த மே மாதம் 6ந் தேதி காந்தாரா படக்குழுவில் பணிபுரிந்த கபில், படப்பிடிப்பு இடைவேளையின்போது உடுப்பி மாவட்டம் கொல்லூர் அருகே உள்ள சௌபர்ணிகா நதியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்தார். மே 6ஆம் தேதி மாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. கபில் நீரில் மூழ்கியதைப் பார்த்த அவரது நண்பர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் மற்றும் நீச்சல் வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், 3 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு இரவு 7 மணியளவில் கபிலின் உடலைக் கண்டுபிடித்தனர்.
சோகத்தில் காந்தாரா 2 படக்குழு
அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் நிகழ்ந்ததே படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்த நிலையில், தற்போது மற்றொரு நடிகர் விஜுவின் மரணச் செய்தி படக்குழுவினருக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. படைப்பாற்றல் மிக்க மிமிக்ரி கலைஞர் விஜு, பல மொழிகளில் நடிப்பு, மிமிக்ரி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். அவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
'காந்தாரா 2' அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி உடன் வேறு யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த எந்தத் தகவலையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது இதுவரை மூன்று கலைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.