பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் முற்றியுள்ளது. இவர்களின் மோதலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
Who Are Behind Ramadoss-Anbumani Clash: தமிழ்நாட்டில் பாமக பெரிய கட்சிகளில் ஒன்றாக உள்ளது. பாமகவின் தலைவராக ராமதாசும், செயல் தலைவராக அவரது மகன் அன்புமணியும் இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு மேடையிலேயே ராமதாசும், அன்புமணியும் மோதிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து தான் பாமவின் நிறுவனராக இருந்த ராமதாஸ் நானே தலைவர் பொறுப்பை ஏற்கிறேன் என்று அதிரடியாக அறிவித்தார்.
ராமதாஸ்-அன்புமணி மோதல்
இந்நிலையில், மகன் அன்புமணியை ராமதாஸ் இன்று கடுமையாக விமர்சித்துள்ளார். அன்புமணிக்கு தலைமைப்பண்பு சுத்தமாக இல்லை. 35 வயதில் அன்புமணியை அமைச்சராக்கியது எனது தவறு. அவரை கட்சியை விட்டே நீக்குவேன் என ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தான் அதிமுக கூட்டணியை விரும்பியதாகவும், ஆனால் அன்புமணி பாஜக கூட்டணி வேண்டும் என தனது காலை பிடித்து அழுததாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மோதலுக்கு பின்னணியில் யார்?
ராமதாஸ், அன்புமணியின் மோதல் வலுத்துள்ளது பாமக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமதஸ் அவரது பேரன் முகுந்தனுக்கு கட்சி இளைஞரணி தலைவர் பொறுப்பை கொடுத்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். இன்று முகுந்தன் பதவியை ராஜினாமா செய்து விட்டாலும், இவரே இருவரின் மோதலுக்கு காரணம் என கருதப்பட்டது. இந்த மோதலுக்கு பின்னால் மூன்றாவதாக சிலர் இருப்பதாக பாமகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ராமதாசை ரகசியமாக சந்தித்தவர் யார்?
அதாவது நேற்று இரவு அன்புமணியுடன் எந்த சண்டையும் இல்லை என தெரிவித்த ராமதாஸ் இன்று அன்புமணியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரே இரவில் ராமதாஸ் மனதை யாரோ மாற்றியுள்ளனர். அவர்கள் எழுதிக் கொடுத்ததைத் தான் ராமதாஸ் படித்துள்ளார் என்று பாமகவினர் சிலர் பதிவிட்டு வருகின்றனர். நேற்று தைலாபுரம் தோட்டத்தில் யாரோ ஒரு முக்கிய பிரமுகர் ராமதாஸை சந்தித்ததாகவும் அதன்பிறகே ராமதாஸ் இப்படி பேசியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
வன்னியர் வாக்குகளை உடைக்க சதி
தான் அதிமுக கூட்டணியை விரும்பியதாகவும், ஆனால் அன்புமணி பாஜக கூட்டணியை விரும்பியதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதில் இருந்தே இருவரின் சண்டைக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை நாம் யூகித்துக் கொள்ள முடியும் என்று ஒரு சில பாமகவினர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர்கள் பாமகவுக்கு தான் அதிகம் தேர்தலில் வாக்கு செலுத்துவார்கள். ராமதாஸ்-அன்புமணிக்கு இடையே சண்டை மூண்டால் வன்னியர்கள் வாக்குகளும் உடைந்து அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கருதி மூன்றாம் நபர்கள் சிலர் பாமகவில் பிரச்சனையை ஏற்படுத்த முயல்வதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.