நீலகிரி மாவட்டத்தில் விடாமல் கனமழை கொட்டி வருவதால் கோவையில் உள்ள சிறுவாணி, பில்லூர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

increase in water inflow to Siruvani and Billur dams: தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி, தேனி, கோவை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர், சிறுவாணி அணைகள் ஏற்கெனவே நிரம்பின.

விடாமல் கொட்டும் கனமழை

கனமழை காரணமாக 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணை முழுமையாக நிரம்பியது. இன்றைய நிலவரப்படி பில்லூர் அணிக்கு 6520 கனஅடி நீர் வந்து கொண்யிருக்கும் நிலையில், அந்த நீர் அப்படியே வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதேபோல் சிறுவாணி அணைக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்று சிறுவாணி அணை.

சிறுவாணி அணையின் முக்கியத்துவம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் இருந்து தினமும் குடிநீர் தேவைக்கு நீர் எடுக்கப்பட்டு, பகிர்மானக் குழாய்கள் வழியாக சாடிவயலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு கோவை நகரத்துக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னக்கல்லாரில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 செ.மீ மழை கொட்டியுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி கடுமையாக பாதிப்பு

நீலகிரி, கோவையில் தொடர்ந்து கனமழை வெளுத்து வருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில், 108 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. சின்னக்கல்லார் பகுதியில் 70 செ.மீ மழையும், மேல்பவானி, எமரால்டு பகுதிகளில் 70 செ.மீ மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரியில் தொடர்மழை காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு விட்டன. 80 சதவீதம் சுற்றுலா பயணிகள் சொந்த ஊர் திரும்பி விட்டதால் வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.