திமுகவில் அமைப்புரீதியாக புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Two New Teams Formed in DMK: திமுகவின் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் மதுரை உத்தங்குடியில் இன்று நடைபெற்று வருகிறது. சுமார் 48 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் மூத்த தலைவர்கள் துரைமுருகன், துரைமுருகன், டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஆ.ராசா உள்பட திமுகவின் அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என சுமார் 10,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

மதுரையில் திமுக பொதுக்குழு

முன்னதாக, இன்று காலை பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் மு.க.ஸ்டாலின் விழா மேடைக்கு வருகை புரிந்தார். அவரை அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். பின்பு மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டு இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைசர் மூர்த்தி

இதனைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ் மறைவு, தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு, கேப்டன் விஜயகாந்த் மறைவு மற்றும் திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள் மறைவு ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்பிறகு பேசிய மதுரையில் பொதுக்குழுவை ஏற்பாடு செய்த அமைச்சர் மூர்த்தி மதுரையில் பொதுக்குழுவை நடத்த வாய்ப்பு கொடுத்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

திமுகவில் புதிதாக 2 அணிகள்

இதனைத் தொடர்ந்து மதுரை திமுக பொதுக்குழுவில் திமுகவில் அமைப்புரீதியாக புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திமுகவில் அமைப்பு ரீதியாக மாற்றுத்திறனாளிகள் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆசிரியர்கள், பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி புதிதாக உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள அணிகளின் எண்ணிக்கை 23இல் இருந்து 25ஆக உயர்ந்துள்ளது.

திமுக பொதுக்குழு தீர்மானங்கள்

இதன்பிறகு திமுக பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுப்பது, வக்பு வாரிய சட்டத் திருத்ததை கொண்டு வந்தது. அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை கைப்பாவையாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்குவது ஆகியவற்றுக்காக மத்திய பாஜக அரசுக்கு திமுக பொதுக்குழுவில் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.