தமிழ்நாடு பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கும் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய திமுக எம்எல்ஏவுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Annamalai condemned DMK MLA: தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை, பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், பணிபுரியும் பெண்களுக்கு தோழிகள் விடுதி என சிறப்பான திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்பது தமிழ்நாடு அரசின் மகத்தான திட்டமாகும்.

பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்

இந்த திட்டத்தின்மூலம் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆகியோர் டவுன் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகின்றனர். இதன்மூலம் பஸ் டிக்கெட்டுக்கு தேவையான பணம் மிச்சமாவதால் அதனை வேறு செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த திட்டத்துக்கு பெண்கள், கல்லூரி மாணவிகள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி கருத்து

ஆனால் இந்த திட்டத்தை பெருமைப்படுத்துவதாக நினைத்து.''பஸ்ல ஓசில தான போறீங்க'' என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி சில மாதங்களுக்கு முன்பு பேசிருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், அவர் வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஆண்டிப்பட்டி திமுக எல்.எல்.ஏ மகாராஜன் பேருந்தில் பயணிக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுள்ளது.

திமுக எல்.எல்.ஏ மகாராஜன் சர்ச்சை கருத்து

அதாவது பொதுமக்கள் மத்தியில் பேசிய திமுக எல்.எல்.ஏ மகாராஜன், ''திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. மூன்று ஆண்டுகளாக எவ்வளவு வேலை நடந்துள்ளது. இப்ப இங்க ரோடு போடப் போகிறோம். அந்த ரோட்டில் புதிய பஸ் விடப் போகிறோம். நீங்க ஓசியில் தான் ஏறிப் போகப் போகிறீர்கள்'' என்று தெரிவித்தார்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம்

திமுக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.

எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?

மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்? வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.