வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்ப திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சீமானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக தெரிகிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
சீமான் வருண்குமார் ஐபிஎஸ் மோதல்
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி விஜயா முன்பு நடைபெற்று வருகிறது. இரண்டு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
சீமான் தரப்பு சொல்வது என்ன?
வருண் குமார் தரப்பு வழக்கறிஞர் சார்பில் 'உயர் பதவியில் இருக்கும் டிஐஜி வருண் குமார் அவருடைய கடமையை செய்தபோது அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் கொடுத்தும் அவதூறான கருத்துக்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வாதங்கள் முன்வைக்கப்பட்டது. சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 'இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்த வழக்கு அல்ல இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என வாதங்களை முன் வைத்தனர்.
சீமான் நேரில் ஆஜராக சம்மன்
இரண்டு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் இந்த வழக்கு குற்றவழக்காக விசாரிக்க உகந்த வழக்கு எனவும் இது தொடர்பாக சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சீமானுக்கு எதிராக சட்டப் போராட்டம்
பின்னர் டிஐஜி வருண்குமார் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''சீமான் மீது வருண் குமார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என நீதிபதி தீர்ப்பளித்தது முதல் வெற்றி. ஐபிஎஸ் அதிகாரியை நற்பெயருக்கு களங்கப்படுத்தி அவதூறாக செய்திகளை பரப்பியதால் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என உத்தரவிட்டுள்ளது. வருண்குமார் தொடர் சட்டப் போராட்டம் நடத்தியுள்ளார்.
மேலும் சீமான் மீது 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என்றார். ''இன்று (அதாவது நேற்று) கூட நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர்'' என்று டிஐஜி வருண்குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.