கோவில்பட்டியில் ஒரே இரவில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. பிரகதீஷ் என்ற இளைஞரும், கஸ்தூரி என்ற பெண்ணும் வெட்டிக் கொல்லப்பட்டனர். பழிக்குப் பழியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஷ் (20) என்பவர் நேற்று இரவு கடலையூர் சாலையில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிரகதீஸை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரகதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது புது கிராமம் செண்பா நகர் 3வது தெருவைச் சேர்ந்த கஸ்தூரி மற்றும் அவரது சகோதரர் செண்பகராஜ் (44) ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
பெண் கொலை
இதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த செண்பகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படுகொலை செய்யப்பட்ட கஸ்தூரி டைப்பிங் இன்ஸ்டியூட் மற்றும் இ-சேவை மையம் நடத்தி வந்தார். இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த கஸ்தூரி உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் பீதி
கோவில்பட்டியில் ஒரே இரவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்படுத்தியுள்ளது. பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.