ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவி ஜனனி, வீட்டிற்குள் புகுந்த இளைஞர் சுப்பிரமணியால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இளைஞர் தற்கொலைக்கும் முயன்றார். ஒருதலைக் காதல் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10ம் வகுப்பு மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்துள்ள புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகத்குமார் (40), கார்பென்டர். இவரது மகள் ஜனனி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை அடுத்து கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். மேலும் அவரது வீட்டில் ஜெகத்குமாரின் அக்கா மகள்களான லக்ஷயா (16), சரண்யா (11) ஆகியோரும் உடனிருந்துள்ளனர். அப்போது அவரது பாட்டி மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

சரமாரி கத்தி குத்து

இந்நிலையில் நேற்று மாலை ஜெகத்குமார் வீட்டிற்குள் புகுந்த சுப்பிரமணி என்ற இளைஞர் திடீரென கதவை தாழ்ப்பாள் போட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜனனியை வயிறு, கழுத்து என பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதை தடுக்க முயன்ற லக்ஷயாவையும் கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜனனி மற்றும் லக்ஷயா இருவரும் அலறியுள்ளனர்.

கொலை செய்துவிட்டு தற்கொலைக்க முயன்ற இளைஞர்

சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த பாட்டி அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜனனி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். மேலும் சிறுமி லக்ஷயா கையில் ரத்த வெள்ளத்துடன் துடித்துக்கொண்டிருந்தார். இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மற்றொரு புறம் இளைஞர் தனக்கு தானே கத்தியால் கீறி தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதி

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லக்ஷயா மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு தலை காதலால் கொலை

இதனையடுத்து ஜனனியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்த வாலிபர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கேஜி கண்டிகை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(21) என்பது தெரியவந்தது. இவர் ஒரு தலை காதலால் கொலை செய்தாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.